காட்டாங்குளத்தூர் | ஜனவரி 2026
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (SRMIST), தமிழ்ப் பேராயம் சார்பில் “முப்பெரும் விழா” இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் தமிழ் அறக்கட்டளையின் தொடக்க விழா, வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலக சாதனை நிகழ்விற்கு சான்றிதழ் வழங்குதல், மற்றும் மாவீரர் தின விழா (பராக்கிரம் திவாஸ்) ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தப்பட்டன.
நிகழ்ச்சிக்கு திரு. கே. அண்ணாமலை, Ex-IPS, தேசிய செயற்குழு உறுப்பினர், பாரதிய ஜனதா கட்சி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும், எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் நிறுவனர் வேந்தர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ் பெரும் புலவர்களான திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், இராமலிங்க அடிகளார், வள்ளலார் மற்றும் பாரதியார் ஆகியோரின் பெயரில் டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் தமிழ் அறக்கட்டளை தொடங்கிவைக்கப்பட்டது. மேலும், இந்த அறக்கட்டளையின் வைப்புநிதிக்காக ரூபாய் பத்து லட்சத்திற்கான காசோலையை எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர், தமிழ்ப் பேராயம் தலைவர், கரு. நாகராசன் அவர்களுக்கு வழங்கினார்.
“வந்தே மாதரம்” உருவானதின் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், எஸ்.ஆர்.எம்.-இல் 3032 பங்கேற்பாளர்களைக் கொண்டு உலக சாதனை நிகழ்த்தியது. இதை அங்கீகரித்து, செல்வி. ஷெரிபா ஹனிபா, world record union அமைப்பின் கல்வியாளரிடமிருந்து, எஸ்.ஆர்.எம். சார்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் திரு. கே. அண்ணாமலை (Ex-IPS) சான்றிதழை பெற்றுக்கொண்டார்.
சிறப்பு விருந்தினரான பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் திரு. கே. அண்ணாமலை (Ex-IPS), கூறியதாவது: “1893ல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒரு ரயில் சம்பவமே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியது. அந்த மாற்றத்தின் பயனாக 54 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சுதந்திரம் பெற்றது.”
மேலும் ‘வந்தே மாதரம்’ என்ற மந்திரம் உருவான வரலாற்றைப் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், “எஸ்.ஆர்.எம்.-இன் வரலாறே அதன் தனித்துவம்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி பல்கலைக்கழகமாக விளங்குகிறது. விளையாட்டில் சிறப்பு, அதிக காப்புரிமை விண்ணப்பங்கள், மேலும் நிறுவனர் தாய்மொழியான தமிழை அச்சமின்றி போற்றும் கல்வி நிறுவனமாகும்,” என்றார்.
எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் அவர்கள், “இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பிறந்தவர்கள் நாங்கள். பள்ளி முடிந்ததும் ஆசிரியர் மாணவர்களை வீதிக்கு அழைத்து வந்து ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முழங்கச் செய்த நாட்களையும், மகாத்மா காந்திஜிக்கு ‘ஜெய்’ என்று கோஷமிட்ட காலத்தையும் நாங்கள் அனுபவித்திருக்கிறோம். அந்த நாட்களிலேயே நாட்டின் நிலையும் அதன் வேதனையையும் நன்கு உணர்ந்தவர்கள் நாங்கள்,” என்று கூறினார்.
தமிழ்ப் பேராயம் தலைவர், கரு. நாகராசன் அவர்கள் கூறியதாவது, “‘வந்தே மாதரம்’ என்ற தேசிய பாடலை கௌரவிக்கும் வகையில் எஸ்.ஆர்.எம். நிகழ்த்திய உலகச் சாதனையை world union Record என்ற அமைப்பு அங்கீகரித்தது பெருமைக்குரியது.
முதலில், தாய்மொழி மீது பற்று இருக்க வேண்டும்; இரண்டாவதாக, தன்னுடைய சமூகத்தின் மீது பற்று இருக்க வேண்டும்; மூன்றாவதாக, தாய் நாட்டின் மீது பற்று கொள்ள வேண்டும்.
உலகின் எந்தப் பகுதியில் யார் தமிழை வளர்க்கும்ப் பணியில் ஈடுபட்டாலும், அவர்கள் அப்பணியை செயல்படுத்த தேவைப்படும் தொகையை வழங்கி, அவ்விடங்களில் தமிழ்ப் பணி தொடர்ந்து நடைபெற எஸ்.ஆர்.எம். வேந்தர் தனது முயற்சியை தவறாமல் எடுப்பார்,” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சி, தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தேசப்பற்று மற்றும் இளைய தலைமுறையின் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
