![THENKASI](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/THENKASI-2-1024x461.jpg)
தென்காசி மாவட்டம் பாப்பாக்குடி அருகே விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் இரண்டு மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
பாப்பாக்குடி அருகே விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, இரண்டு மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார் தீர்ப்பு கூறினார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி புதுக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் சுப்பையா (எ) துரை (வயது 54). விவசாயி. இவரது மனைவி உச்சிமகாளி. இவர்களது மகன் மாரிமுத்து. இவருக்கும் சமத்துவ புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகள் உமா செல்வி என்பவருக்கும் திருமணம் ஆனது.
திருமணத்திற்குப் பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கோரி அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை 13.8.2022 அன்று இருந்துள்ளது. அன்று மாரிமுத்து நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 14.8.2022 அன்று சுப்பையா (எ) துரை பைக்கில் தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மாரியப்பன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் லண்டன் (எ) துரை, சுடலைமணி ஆகியோர் இரண்டு பைக்குகளில் சென்று சுப்பையா (எ) துரையை வழிமறித்து எப்படி உன் மகன் நீதிமன்றத்திற்கு வராமல் இருக்கலாம். உன்னை வெட்டி கொன்றால்தான் அவன் வருவான் என கூறி அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து பாப்பாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பையா (எ) துரையை கொலை செய்த மாரியப்பன் மற்றும் அவரது இரண்டு மகன்களையும் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி எஸ்.மனோஜ் குமார் வழக்கை விசாரணை செய்து சுப்பையா (எ) துரையை வெட்டி படுகொலை செய்த மாரியப்பன் (வயது 51), அவரது மகன்கள் லண்டன் (எ) துரை (வயது 25), சுடலைமணி (வயது 26) ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000ம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எஸ்.வேலுச்சாமி ஆஜரானார்.