
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக தகவல் சேகரிப்பு பணியில் ஈடுபட உள்ள களப்பணியாளர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு பயிற்சி வகுப்பை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் அறிவித்துள்ள “எல்லாருக்கும் எல்லாம்” என்ற திட்டத்தின் படி, மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும், திட்டங்களும் முறையாக பயனாளிகளுக்கு சென்று அடைகிறதா? என்பதை கணக்கெடுப்பதற்கு 3 நாள் பயிற்சி வகுப்பு மூலம் களப்பணியாளருக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 180 களப்பணியாளர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா.சுகுமார், பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சு.சிவசங்கரன், உரிமைகள் திட்ட மேலாளர் சங்கர் சகாயராஜ், சுவஸ்திக் தொண்டு நிறுவன நிர்வாகச் செயலாளர் தமிழ்துரை, பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஜேக்கப், பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சி ஹெப்சிபா உள்பட பலர் பங்கேற்றனர்.